Tuesday 14 August 2012

சொல்லி தெரியவதில்லைய “டி” காதல்

என்னில்
ஒரு பெருதுளியை
தனக்கென எடுத்துக்கொண்டாய்
உரிமையில்லாத போதும்
உன்னை
பறித்துக்கொண்டவள் நான்
ஒரு
கோவப்பெருந்தீயில்
சிவனாய் மாறி என்னை
சுட்டுப்பொசுக்கி
சாம்பலை இதயத்துக்கு பூசி
வெற்றியில் களித்தவன்
நீ
காதலை கேட்டேன்
சொல்லி தெரியவதில்லைய “டி” காதல்
என்றாய்
ஒர் எழுத்தில்
உன்
உறவை சொல்லி....!

Wednesday 8 August 2012

சேமிப்பும் செலவும்!!!

என்னிடமிருக்கும்
சேமிப்பை கணக்கிடலானேன்
அடைமொழி
அத்து மீறல்
முத்தம்
சண்டை
கோவம்
மெளனம்
கெஞ்சல்
மெனக்கெடல்
புன்னகை
கண்ணீர்
காத்திருப்பு
கவிதை
ஆசை
உன்
பார்வையின் மொழி
கொஞ்சம் செல்லமும் சில்மிஷமும்
சினுங்கல்
போதுமென்று நினைக்கிறேன்
உனக்காக செலவிட..
சொல்ல மறந்தேன்
இதழின் கடையேரம்
என்
உயிரின் துளியை ஒளித்து வைத்திருக்கேன்
நீ போகும் போது
செலவு செய்துக்கொள்!!

Tuesday 7 August 2012

கருணை!!




உனக்கும்
கரிசனம் இருக்கிறது என்பதை காட்ட
என்னை பற்றி நான்கு
வரிகள் மட்டுமே எழுத முடிந்த நீ
என்
பின்னால் நின்று
என்னை வேடிக்கை பார்
படம் எடு
கருணை சிந்து
முடிந்தால் ஒரு பத்து ரூபாய் தாளை நீட்டு
பரிதாபப்பட்டு
உன்னை மனுஷியாய் காட்டிக்கொள்ளாதே
உனக்கெப்படி
தெரியும் நீ போன பின்
உன்னை போல் நான் ஏன் இருக்க கூடாது என்ற
கனவும் என் முதுகில் சுமையாகுமென்று!!!

Friday 3 August 2012

நீ -11





இந்த
என் காதலேனும் தொலைந்துவிடாமல்
பொத்தி வைக்க இடமின்றி
உன்னிலேயே
உன்னை விட்டு வைக்கிறேன்
எனக்கானவன் நீ
உன்னை என் அனுமதியின்றி
செலவு செய்து விடாதே
கை வசம்
உன் ஒரு புன்னகையை மட்டும்
கொண்டு செல்கிறேன்
நிகழ்காலத்திற்கு
எனக்கது போதும்!!!!!

Wednesday 1 August 2012

எனக்கு தெரியும்........





எனக்கு தெரியும்
உனக்கே உனக்கேயான என் மொழியில்
நீ ஒரு குழந்தை
ஊர்ஜிதப்படுத்திக்கொள்வேன்
என்னை
அழவைக்கும் போதெல்லாம்

எனக்கு தெரியும்
நீ ஒரு தொட்டாச்சிணுங்கி
தொடாது போனாலும் சிணுங்கும்
செல்ல போக்கிரி நீ
அறிந்து கொண்டேன்
நீ முனுமுனுக்கும் போதெல்லாம்

எனக்கு தெரியும்
நீ ஒரு மதுக்கிண்ணம்
பருகி கிரங்கியதிலிருந்து
தெரிந்து கொண்டேன்
நான்
உளறிக்கொண்டிருக்கும் போதெல்லாம்

எனக்கு தெரியும்
நீ ஒரு இம்சை
அன்றாடம் குறைந்துக்கொண்டிருக்கும்
என் ஆயுட்காலம்
சொன்னதில் உணர்ந்துக்கொண்டேன்
உன்
பார்வையால் நான் பரிதவிக்கும் போதெல்லாம்

எனக்கு தெரியும்
நீ ஒரு இத்தியாதி இத்தியாதி இத்தியாதி
எனக்கென்று!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
புரிந்து கொண்டேன்
என்னை கண்ணீர் சிந்த வைத்து
உன் காதலில் நீ வென்ற போதெல்லாம்!!!

உரக்க ஒரு முறை கேட்க ஆசை
ஏண்டா ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்?ன்னு

Saturday 28 July 2012

பேராசை!!



ஆசைகளை களைய
அனைத்தும் வியப்பாய் இருந்தது
எந்த தேவனிடம் பிரார்த்திக்க
இனி என்னை எந்த பேராசையும் கவ்வக்கூடாதென்று
மனசை கொஞ்சம் கீறி
ரணமாக்கிக்கொண்டேன் வலிக்கிறது
காயத்துக்கு மருந்திடும் எண்ணமில்லை
சற்றே வலிக்கட்டும் இப்போதைக்கு
அதற்குள் ஆசைகளை துறக்கவும் பயின்றுக்கொள்கிறேன்
எனக்கானவை என்பதன் மென் பொருள்
மெல்ல புரிய களைகிறது என் கூரையின் மேல் வானம்
நிர்மூலமாய் வெகு நிர்மூலமாய்
ம்ம்ம்ம்
இனி இதில் சுகம் தேட பழகிக்கொள்ளவேண்டும் என
எண்ணி முடிக்கையில்
ஒரு நாள் தோழி சொன்னது நினைவில் வந்தது
உன்னில் தேடு அன்பை என்று..
எனக்குள் சிரித்துக்கொள்கிறேன் எனக்கும் கேட்கிறது என் சிரிப்பு இப்போது
ஒரு முறை வந்து போனது எனக்குள் சட்டமிடப்பட்ட உன் முகம்!!!

செந்நிற கணங்கள்


செந்நிற கணங்கள்
இருப்புக்கொள்ளாமல் நீ என் இருப்பில்
கொடுத்த அன்பையெல்லாம்
தவணை முறையில் ஈட்டிக்கொண்டு
இருக்கிறாய் தகிப்பு முறை கையாண்டு
இரவுகள் எடுக்கும் முடிவையெல்லாம்
கலைத்து போட்டு குளிர்க்காய்கிறது
அன்றாட விடியல்கள்
உன் கொடுங்கோலாட்சியில் ஏன் நான் மட்டும்
அடிமையாய்!!
நீ என் மன்னன் அல்லாத போதும்!!
இதோ நானும் தீயில் உருகி
என் மாமிசம் சதையாய் ஒழுகிக்கொண்டிருக்கிறது
குருதி மட்டும் தீயில் உறிஞ்சப்பட்டு
எலும்புகள் மட்டுமே மிஞ்ச
எடுத்து அணிந்துக்கொள்கிறாய் அதையும் மாலையாக்கி
எனக்கு இடுகாட்டானாயும்
நீ மட்டுமே இருக்க வேண்டுமென்ற
தீர்க்கத்தில்.....
பிடிமண் போடும் போது என் பேரை உச்சரிக்காதே
அடுத்த பிறவி எனக்கு உனக்காக வேண்டாம்!!!

Thursday 26 July 2012

செளக்கியங்கள்!!!


செளக்கியம் கேட்பவர்களிடம்
எப்படி சொல்வேன்
மிகச்சொற்பமே கைவசம் என்று
இனி யாரேனும் கேட்பாராயின்
உயிரை கேட்பதாய் உத்தேசித்துள்ளேன்
அசெளக்கியங்களை அறிவதே
ஒரு செளக்கியத்தின் உத்தேசம்
இழப்புகளின் பலனாய் பாடம் இது
எப்படி பார்த்தாலும் அவர்களை விட
நான் பரவாயில்லை தான்
என்னிடம் செளக்கியம் கேட்டு
தங்கள் அசெளகரியத்தை எனக்கு
விட்டுச்செல்ல உத்தேசித்துள்ள
உத்தேசம் எனக்கும் வெகு சமீபத்தில் தான் உரைத்தது
சமீபமாய் உன் அசெளக்கத்தை என்னிடம் காட்டிய நீ தான்
அனேகமாய் இந்த கவிதைக்கும் கதாநாயகன்!!!

Wednesday 25 July 2012

காதல் பிரம்மாக்கள்




அந்த பெருவிழியில் வீற்றிருக்கிறது
என் பிம்பம்
ஓய்யாரமாய்,ஆங்காரமாய் மிக அலட்சியமாயும்
என் பார்வையின் கரிசனத்தில் தான்
அவன் கடந்து கொண்டிருக்கிறான் பாதைகளை
நான் சேகரித்தும் நிராகரித்தும் கொண்டிருக்கிறேன்
அவன் பார்வைக்கான ஊடுறுவல்களை
அதை அப்படியே ஆமோதிக்க அவனும்
பழகிக்கொண்டிருக்கிறான்
இருவரின் பார்வைக்கும் பிடித்தவைகளை மட்டும்
நானும் அவனும் கவிதைகளாக்குவோம்
அனேக நேரங்களில் அவன் பார்வை
இழந்தவனாக இருக்கவே ப்ரியப்படுகிறான்
அவ்வேளைகளை நாங்கள் இரவுகளாக்கிக்கொள்கிறோம்
கனவுகளுக்கு இங்கு இடமில்லை
நாங்கள் சிற்பிகள், ஓவியர்கள், கவிஞர்கள், கதைச்சொல்லிகள்
எங்களுக்கானவைகளை தோற்றுவித்துக்கொண்டு
நாங்கள் கடவுள் ஆனோம்!!!

Tuesday 24 July 2012

காலம்!!!

உன்னை
பார்க்கும் போதெல்லாம் ஏதோ ஒன்று சொல்ல
எதையோ கேட்டவே நினைக்கிறது மனம்
உன் கண்ணீர் கண்டதும் என்னை அணைத்தப்படி
நீங்கிவிடுகிறேன் நீயும் வழிந்த கண்ணீரை துடைக்க
மறந்த படி சென்றுக்கொண்டிருக்கிறாய்
இருப்பினும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது
நீ கண்ணீருடனும் நான் வெறுங்கையுடனும்
ஒரு நாள் சந்திப்போம் என்று
அன்று அலவளாவிக்கொள்வோம்
நான் தந்து சென்றது நீ கொண்டு சென்றது பற்றியெல்லாம்
அதுவரை நீ சிந்தியபடி இரு கண்ணீரை
நான் எப்படி கேட்பது என்று
கேட்டுக்கொண்டே இருக்கிறேன் என்னை
அதுவரை வேறு ஒலங்கள் கேட்காதிருக்கட்டும் நமக்கு!!!

Monday 23 July 2012

அவள் அப்படித்தான்!!!

கொஞ்சம்
மெறுகேற முனைகிறேன்
வேறு வழியே இல்லை
உன்னை இறக்கி வைப்பதை தவிர
என் பேனாவின் முனை
மழுங்க செய்தததை விட
வேறொன்றும் தரவில்லை நீ பதிலுக்கு
ஒரு ஈரப்புன்னகைக்கும்
காயந்திருந்தது உன் இரக்கமற்ற இதழ்கள்
ஒரு
ரோஜாவை கூட ரசிக்கும் மன நிலை காணவில்லை உன்னிடம்
பேருந்தை தவற விடக்கூடாதென்பதிலேயே உன் கவனமெல்லாம்
உன்னை பேருந்து ஏற்றி விட்டு கை அசைத்து விடைபெறுகையில்
உள்ளங்கையில் ஈரக்கசிவு
அனேகமாய் அது உன் மேல் தெரித்திருக்க வாய்ப்பில்லை
தாலாட்டி உறங்கப்பண்ணித்தான் ஓய்வெடுக்கப்போகிறேன் உன்னில் இருந்து
நீ எழுந்தாலும் என்னை அழைக்காதே
உன் தேவைகள் அனைத்தும் உன் கை எட்டிய தூரத்தில்
அடுக்கி வைத்திருக்கிறேன் இனி உன்னை நீயே பராமரித்துக்கொள்
இது என்ன என்று கேட்பவர்களுக்கும் என்னிடம்
பதில் ஏதும் இல்லை கடந்து போய்க்கொண்டிருங்கள்
அவள் அப்படித்தான்!!!!

Wednesday 18 July 2012

மனசு

எல்லாம் ஏதுவாய் இருக்கிறது
புன்னகைத்துக்கொண்டே இருக்க..
ஒரு அறிமுகம்
சாலைகடத்தல்
சேலை தேர்வு,
விட்டுக்கொடுத்தல்
சின்ன சின்ன சண்டை,
நெட்டி முறித்தல்
முத்தமிடுதல்,
காதல் சொல்வது
மெளனப்போராட்டம்
ஊடுறுவல்,
இதயம் துளைத்தல்
கண்ணாமூச்சி
சமையல்
அடுத்த வீட்டு ஜன்னல்
கொஞ்சம் பொறாமை
புதுசா தைத்த சுடிதார்
கவிதை எழுதுதல்
நண்பர்களோடு அரட்டை
புறம் பேசுவது
இப்படி
இன்னும் இன்னும்
எல்லாம் ஏதுவாய் இருக்கிறது
புன்னகைத்துக்கொண்டே இருக்க
இருப்பினும்
எதற்கோ புழுங்கிக்கொண்டிருக்கிறது
”மனசு”

Tuesday 17 July 2012

அவன் வந்த பொழுதுகள்..

இப்படியான
ஒரு பொழுதில் தான்
எங்கள் அறிமுகம்
உத்தரவோட உள்ளே வந்தான்!!

அவசர வேலை நிமித்தம்
அங்கிங்கென்று அலைந்துகொண்டிருந்தான்
கூடவே
என்னை அழைத்து வரவேண்டும்
என்ற
கட்டாயமும் அவனுக்கு இருந்தது !!

அப்படியான
ஒரு பொழுதில் தான்
எங்கள் முதல் சந்திப்பு நிகழ்ந்தது!!

அழுக்காய் இருந்தான்
அது அலைச்சலின் நிமித்தமாய் இருக்கலாம்
அழுக்கான பசங்களை பெண்களுக்கு பிடிக்குமாம்
நேற்று குளிக்காத நண்பன் சொன்னான்..

அப்போது
என் கண்களுக்கு அழகாய் இருந்ததன்
காரணம் புரிந்தது!!

விடைபெறும் போது
விழியிடம் ஏதோ கேட்டு
எதையோ தேடி விழியால் ஏதோ சொன்னான்
அப்போதேதும் விளங்கவில்லை!!

வீடு வந்தேன்
விடைகிடைத்தது

எப்படியோ
ஆன ஒரு பொழுதில்
அபகரித்திருந்தான்
“ அவன் “
என்னை!!!

Wednesday 4 July 2012

வா இலக்கியமாகலாம்..

உன்னை
நிந்தித்தும்
என்னை நொந்துக்கொண்டும்
கால விரயமே...
இருப்பினும்
பசிக்க தவறவில்லை
வேஷம் இடுவதும் நின்றுவிடவில்லை
ஏதோ
ஒன்றுக்காக ஏதோ ஒன்றில்
செயல்பட்டாக வேண்டிய
கட்டாயத்தில்
நீ
நான்
அவர்கள்
இவர்கள்
அவை
இவை
கடந்து கொண்டிருக்கிறது
பொழுதுகள்
இப்போதெல்லாம்
எதற்கும் கலங்குவதில்லை விழிகள்
புத்தகமாக
எல்லா கட்டுகளும் பொருந்தியபடியால்
ஒரு
இலக்கியத்திற்கு நாயகியாய்
எல்லா தகுதிகளோடும்
நான்
ஏன்
நீ கூட என்னை
காவியமாக்கலாம்
உனக்கும் அதற்கு
எல்லா திறமைகளும் உண்டு
நேற்றைய
உண்மை இன்றைய சரித்தரம்
நீயும் நானும்
நாளைய இலக்கியமாய் மாறலாம்
உன்னால்
இயலாது என்றால் சொல்
வேறு
எவரையேனும்
நம்மை
எழுத சொல்லலாம்

Wednesday 13 June 2012

நீ...10

தந்துச்சென்ற
நீயும்
வாங்கி வந்த
நானும்
இப்படியே
இருந்துவிடுவோம்

ஆனால்
துரத்தி வரும் நினைவு
தூபம் போடும் ஆசை
ஆபுத்திரனின் அட்ஷய பாத்திரமாய்
அன்றாடம் சுரக்கும்
ப்ரியத்தை தானமாய் தர
நான் மணிமேகலை
தெய்வமில்லை..

வா
வந்து வாங்கிப்போ
திரும்ப
நீ
எதுவும் தரவேண்டாம்

உன்னால்
உனகாக பிறக்கும்
என்
ப்ரியங்களின் தகப்பன்சாமி
நீ
தான்

இழிவு காலமா?

அன்றொருவன்
காதலிக்க
அடுத்தொருவனை
மணமுடித்தனர்
இன்று
நானொருவனை காதலிக்க
ஈரமில்லாத பூமி
சொல்கிறது
இதென்ன இழிவு காலமென...

நான் யாரென்று
எனக்கே புரியாமல் போக
என்
எழுத்துக்களை
ஆணாக்கி அன்றாடம்
என்னை நானே
மானபங்கப்படுத்திக்கொள்கிறேன்...

எந்த புலவன் இனி
வரப்போகிறான்
என்னை
காவியமாய் படைக்க?

Tuesday 12 June 2012

நீ....9

இன்னும்
நிலா காட்டி சோறுட்ட
அடம்பிடிக்கிறாய்

ஒன்றிரண்டு பருக்கைகள்
மேவாயில் ஓட்டிக்கொள்ள
எனக்கும் பசிக்க
ஆரம்பிக்க

போதுமானதாய் இருக்கிறது
அவ்விரு
பருக்கைகள்...

Monday 11 June 2012

கோலம்.

நேர்த்தியாய்
திருத்திய புள்ளி நீ
சாரலுக்கே அழிந்துவிட்டாய்
நியதி தான்
எதுவும் விதிவிலக்கல்ல
என் பேராசைக்கு முன்..

இனி
கோலமிடும் எண்ணமில்லை
என் வாசல்
அம்மணமாகவே இருக்கட்டும்
இனியொரு
வண்ண கோலம்
வேண்டாம்
வாழ்க்கைக்கும்...

நீ.....8

இன்னும் குழந்தையாய்
நீ...
இன்னும் குழந்தை தான்
நீ
குழந்தை
நீ
மழலை
நீ....

கருவில்
நீ
என்
திருவிலும்
நீ
நீ
நீ
நீ
நீதாண்டா....
.....................ஏன்
இன்னும்
குழந்தையாய்
நீ?

நீ.....7

ஏதோ
ஒன்றை சொல்ல
ஏதோ ஒன்றை
கேட்க
ஏதோ ஒன்றை
நினைக்க
ஏதோ ஒன்றை
மறக்க
ஏதோ ஒன்றில்
தவிக்க
ஏதோ ஒன்றை
இயக்க
ஏதோ ஒன்றை
பாட
ஏதோ ஒன்றை
இழக்க
ஏதோ ஒன்றை
எழுத
கொஞ்சம் நேரம்
என்னை திரும்பக் கொடு
அந்த
ஏதோ ஒன்றில்
சற்று நேரம் ஒன்ற...

தேடல்

என்
ஏமாற்றத்தை
இயலாமையை
தவிப்பை
ஏக்கத்தை
நிர்வாணமாக்கி
குத்தி கீறி இரணமாக்கி
காண்கையில்
கொக்கரிக்கிறது
சிதறிய ரத்ததுளிகளும் மாமிச துண்டுகளும்
இப்போதும்
உனக்கு ஒன்றும் கிடைத்திருக்காதே என்று..

-----------------------

பகுதி
வாரியாய் பிரிக்க
எத்தனிக்கையில்
நான் நீ என போட்டி போட்டுக்கொண்டு
பிரிவுகள்
எதை பிரித்து எதை எதால் வகுத்து
இயலுமா எல்லாம்
தளர்ந்து விட்டேன்
இருந்து போகட்டும்
இந்த இயலாமையை
இறுமாப்பாய் காட்டிக்கொண்டு
நடையை கட்டுகிறேன் நான்
எதையும் கண்டுக்கொள்ளாமல்
ஜனநாயகம்.

----------------

வேடிக்கை

அவள்
கண்களில் அந்த காயம்
ஆறாமல் சீழ் வடிய

அவன்
கண்களில் மேலும் ஒரு மொட்டு
அரும்ப துடிக்கும் தயார் நிலையில்

அவர்கள்
கண்களில் இன்னும் சற்று அதிக பிரகாசம்
நிமிர்ந்து உட்கார்ந்து உட்கார்ந்து
இடை வலித்த பின்னும்
சுவாரஸ்யத்தின் முனைப்பில்

இப்படியாக
காலங்கள் கடக்க
நேற்று அன்றாகி
இன்று நேற்றாகி
நாளைக்காக காத்திருக்கு
அரசியல்
ஆன்மீகம்
சமூகம்
காதல்
விலைவாசி
தோல்வி
வெற்றி
கல்வி
கடன்
ஜெனம்
மரணம்
பாவ புண்ணியம்
குழந்தை சிரிப்பு
நோயின் வலி
தீவிரம் அடக்கா பசியோடு
நா........

நீ.....6

தட்டு தடுமாறி
நீ
தவறி விழுவதை
பார்க்கும் போதெல்லாம்
வருத்தமாய் தான் உணர்கிறேன்
உன்
பார்வை பறித்த
குற்றவாளியாய்..
ஆனாலும் உனக்கும் ஓர் வாய்ப்பு
கொடுத்தேன்
மரணிக்கச்சொல்லி.

--------------

அன்னைக்கு ஒரு நாள்
அடுத்தொரு நாள்
பிறகொரு நாள்
முந்தின நாளுக்கு முன் நாள்
முந்தின நாள்
நேற்று
இன்று
அன்றாடம் நீ அனுப்பும்
அத்தனை புகைப்படத்திலும்
நீ மெருகேறி தான் இருக்கிறாய்
நான் தான் இன்னும்
நீயாகாமல்

“ தீ “ யாகி

---------------

எப்படியாவது
இன்றேனும் என் கவிதையில்
உன்னை நிறுத்த
எண்ணிக்கொண்டிருக்கையில்
எளிமையாய் எப்போதோ
என்னை
கடந்து சென்றுவிட்டிருக்கிறாய் நீ
எப்படி
இதில் யாருக்கு யார்
வேண்டாம்?

----------------

Sunday 10 June 2012

இப்படிக்கு காதல்....................

நிறைய
சொல்லனும்
என்ன சொல்லனும்?
ஏதேதோ சொல்லனும்
என்னன்னு சொல்லனும்?
எல்லாம் சொல்லனும்
என்னென்ன சொல்லனும்?

எப்படி சொல்ல?
எப்படியாவது சொல்
எதை மட்டும் சொல்ல?
எல்லாவற்றையும் சொல்
சொன்னால் என்ன செய்வாய்?
கேட்டால் ஏதாவது செய்வேன்

கேட்டு என்ன செய்வாய்?
கேட்காமல் ஏதும் செய்வேன்
கொடுத்ததை என்ன செய்ய?
கொடுக்காமல் வைத்திரு
ஏதேனும் புரிகிறதா?
எல்லாம் புரிகிறது

பிறகேன் இப்படி
உனக்கு பிறக்கத்தான் அப்படி...

இப்படிக்கு
காதல்....................

நீ.....5

இன்று
ஞாயிற்றுகிழமை இன்னும்
அவன் எழுந்திருக்கவில்லை
சற்றே அதிகம் களைந்திருந்தான்
புறமுதுகு காட்டி உறங்கிகொண்டிருந்தான்
சத்தியமாய்
இதற்கெல்லாம் காரணம் நானில்லை
அருகிருந்து பார்க்கிறேன்
குளிக்காமல்
அழுக்காய் இருந்தாலும்
அழகாய் தான் இருக்கிறான்
உறக்கத்திலும்......

கலியுகம்

மாசறு
பொன்னாய் வாழ்ந்ததெல்லாம்
பொற்காலம்
கற்றல் கேட்டல் அறிதல்
இப்படி
அனைந்தும் அறிந்ததன் பயனாய்
நிம்மதி தொலைந்து
மாசுறு பெண்ணானேன்..
இம்மை
மறுமைக்கெல்லாம் அஞ்சியது அக்காலம்
எப்பாடுபட்டு கெட்டதெல்லாம் எதற்காக
நான் நடக்கும் பொருட்டு
சிந்தும் ஆணவத்துளிகளால்
பிறர் ஆசிர்வதிக்கப்படுவார்களே அதற்காக!!!

நீ .....4

எந்த
சந்தோஷங்களையும் கொண்டு
சமன் செய்ய முடியவில்லை
நம் ப்ரியங்கள்
வாழும் இடத்தில்..
நம்
நேற்றைய பொழுதை இன்னும்
கொண்டாடிக்கொண்டு 
நான்
புறையோடி நீர் அருந்த
மறந்து நீ.....


---------------------


அச்சம் தவிர்
என
நீ அறிவுறுத்துகையில்
அறிந்திருக்கவில்லை
நான்
நீ
உன்னை 
தவிர்க்க சொல்லி இருக்கிறாய் என்று.


---------------


விடைபெறுகையில்
நெற்றி
கண்
கன்னம்
இதழ் என
நீ
தந்த முத்தங்களை விட
இனிக்கவில்லை 
கலவி...


---------------



நீ.......3

வழியெங்கும்
நீ விதைத்து சென்ற
பார்வை
விளைந்து கிடக்கிறது
காதலாய்..


-----------


ஈரமற்ற
பார்வையில் என்ன விதைக்க?
தரிசாகவே கிடக்கட்டும்
காதலின்றி..


----------------


உள்ளங்கைகளில்
உன் முகத்தை ஏந்தி
நான் ரசிக்கையில்
நீ 
சிந்திய சில புன்னகைகள்
காதலா?
காணிக்கையா?


------------


உயிர்த்தும்
நீத்தும்
கண்ணீர்
வாசம் மாறாமல்
நீ வாசிக்க
மூடி வைத்த புத்தகம்...


----------------


அந்த
நானிலத்தில்
அவன்
பாலைவனம்
என் இதயத்தின் ஈரம் கூட 
அவனிடம்
வறண்டு விடுகிறது.


--------------


நீ
உறங்கிய பின்
என்னால் எழவே முடிவதில்லை
எழுத்தாய் கூட..


----------

முத்தம்

அந்த
ஜீவாலையில்
பொசுங்காத ஓர் முத்தத்தை
இன்னும் 
பொத்தி வைத்திருக்கிறேன்
அடுத்த முறை
தீ மூட்ட!!!


----------------


ஒற்றை 
முத்தம் தான் என் முதலீடு
இன்று 
நான்
அவன் முத்தங்களின் மகா ராணி.


---------------


என்
முத்த 
நெரிச்சலில்
உன்னை காப்பாற்ற
மனமில்லை
இம்முறை
மூச்சு முட்டி இறந்து விடு!!


------------------


ஒளிந்து 
கொள்கிறான் நான்
தேடி வந்து முத்தமிட வேண்டுமாம்
பூச்சாண்டி வருகிறான்
கொடுத்திடுவேன் என்பேன்
முன் வந்து நின்றிடுவான்
ஒளிந்திருந்த கள்வன்.


---------------


மழையில்
அவன் என்னை
முத்தமிடுவதை நான் அனுமதிப்பதில்லை
பின் வரும் நாளில் அது
முத்த பூமியாகிவிடும்!


----------------

நீ - 2

எத்தனை
குறுக்கு வழியும் பாயும்
ஒரு ஊடல்.
அத்தனை
சமாதானங்களையும்
தேடும்
பின் கூடலுக்காய்.


---------------


சின்ன
சின்ன அத்துமீறல்கள்
அடம் பிடித்து
ஓடும் குழந்தையின்
கால் தடங்களாய்..
கடிந்தவாறு
சிணுங்கலும் சிணுங்கியவாறு
இணக்கமும்
இரவு நேரத்து
இணக்கத்தின் குறியீடுகள்.


---------------


தூக்கம்
துறந்த இரவுகளில்
விழியில் வெளிச்சம் போட்டு கனவுகள்
நீர்க்குமிழி 
கனவுகள் உடையும் போது
கசியும் நீரை
கண்ணீர் என்கின்றனர்
என்னில்
உன்னை காணதவர்கள்.


------------------


எந்த
கவிதையும்
என்னுடையது அல்ல
அவை
நீ
தீண்டிய போது
உதிர்ந்த
முத்தங்கள்.


-------------


அது
உன் பெயராகத்தான்
இருக்கக்கூடும்
அதனால் தான்
நான் 
இத்தனை முறை எழுதுகிறேன்.


------

நீ,,,1

நீ
என்ற நீ 
நீயாகவே
எனக்கு 
நீ 
காதலுமில்லை
கவிதையுமில்லை
கோவிலுமில்லை
கடவுளுமில்லை
அத்தை மகனோ
மாமன் மகனோ
இல்லவே இல்லை
நீ
என்ற நீ
நீயாகவே
எனக்கு
யாரோவாகவே
நண்பனுமில்லை
பகைவனுமில்லை
கட்டியவனா
அய்யோ அறவே இல்லை
நீ
என்ற நீ
நீயாகவே
எனக்கு
நீ
உறவுமில்லை
உயிருமில்லை
இதயமும் இல்லை
காயமோ தழும்போ
இல்லவே இல்லை
நீ
என்ற நீ
நீயாகவே
எனக்கு
நீ என்ற
நீ
வானமோ மழையோ இல்லை
நிலமோ பயிரோ இல்லை
சிரிப்போ அழகோ
இல்லவே இல்லை
நீ
என்ற நீ
நீயாகவே
எனக்கு
தூக்கமும் இல்லை
துக்கமும் இல்லை
எதுவுமாய் இல்லை
ஏதுமாயுமில்லை
அனைத்தும் நீயே
என்பதோ அறவே இல்லை
நீ
என்ற நீ
எனக்கு
நீயாகவே
யாரென்று உன்னை
நான் கேட்கவேயில்லை
நீ
என்ற நீ
நீயாகவே
எனக்கு
நான் என்ற நானும்
நீயாகவே!!!

Wednesday 2 May 2012

தந்து சென்ற முத்தம்..

ஆறாமலே 
இன்னும் இளஞ்சூடாய்

மீட்டுக்கொண்டு போடா
உன் முத்தத்தை

நீ தந்து போன
சுவடறிந்து என்னிடம்
குரோதம் பாராட்டும்
அண்டை வீட்டு பெண்கள்
கொடி மல்லிகை
தொட்டியில் பூத்த ரோஜா 
பருவம் என்று பசப்பும் மழை
மிரட்டி பார்க்கும் இடி மின்னல்
கண் சிமிட்டி காதல் சொல்லும் விண் மீன் கூட்டம்
என நீளும் பட்டியலுக்கு
முற்றுப்புள்ளி வைத்து

மீட்டுக் கொண்டு போடா
உன் முத்தத்தை.........

Monday 30 April 2012

மே 1



பெரும்பானமையெனும்
பேரிரைச்சலில்
வெள்ளப்பெருக்கின் வீரியமாய்
அடித்துச் செல்லும் 
சிறுபான்மையின் பெருகுரல்
ஒரு விடியலுக்கான காத்திருப்பில்
அன்றாடம் வேர்வையாய் சிந்தும்
உதிரத்துளிகள் கணக்கெடுப்பில் வருவதில்லை
நிர்ணயித்த கொடைக்கூலியால்

விலைவாசி அரக்கனின்
கொடூரப்பசியில் குரல்வலை சிக்கி
நசித்துக் கொண்டிருக்கும்
எங்களுக்கு கொண்டாட்டமாய்
பேரில் மட்டுமே புழங்குகிறது
இந்த மே பெரு தினம்

ஒரு விடியலுக்கு 
காத்திருப்பு
முடிவுக்கென சில
பிணக்காய் பல
ஆரம்பத்திற்கு
அகம் மகிழ
பொய்கள் 
புறவாழ்வு வெறுத்து
மரணம் வாங்கி
மனமகிழ்தல் 
வினாக்களோடு வீதி வலம் 
புறக்கணப்பு
தெளிதல்
இழத்தல்
உணர்தல்
ஊழியம்
போதும் இந்த பெருவாழ்வென

ஒய்வெடுக்கும் போது
விஸ்வரூபம் எடுக்கும்
முதுமை என்னும் இயலாமை
முடியும் வரை நிமிரவே நேரமின்றி
முடிந்து போகிறது எங்கள் பிறவி

இருந்தும் தன்னம்பிக்கை
தளர்வதில்லை எங்களுக்கு
வறுமை கோட்டை சற்று தளர்த்தி தான்
ஓய்கிறோம் எங்கள் சந்ததிகளுக்கு
கல்வியென்னும் களஞ்சியத்தை காட்டி...

Tuesday 24 April 2012

மானிட பிரம்மன்



இதோ
பிரம்மன் தனக்காக
என்னை
சிருஷ்டிக்கிறான்
பார்வை
காதல்
கணிவு
பாசம்
ஆசை
காமம்
உரிமை
அக்கறை
கருணை
தாய்மை
கோபம் 
இறைமை 
பத்து பத்து விழுக்காடு இட்டு
நூறுக்கு மேற்பட்ட விழுக்காட்டோடு
அதீததமாய் அங்கரீக்கப்பட்டேன்
அந்த மானிட பிரம்மனுக்கு
பொருத்தமான தேவதையாய் நான்!!!.

Monday 23 April 2012

நிலா நிலா ஓடிவா!!

கலையும் மேகக்குவியலில்
ஒளிந்தும் ஓடியும்
விளையாடி கொண்டிருக்கிறாய் நீ

நட்சத்திரங்களை எண்ணி
தோற்றுக் கொண்டு இருக்கிறது
கனவுகள் பொய்யான 
பல ஜோடி கண்கள்

உன்னை எழுதி
கொண்டாடிக் கொண்டிருக்கிறது
கவி உலகம்

உன் ஒளி தாங்கி
மடி விரித்து பூமி.
.
உன்னை பிடித்து தருவதாய்
இன்னும் பொய் சொல்லி
சோறுட்டும் ஓரிரு அம்மாக்கள்

அதோ உன் அழகுக்கு
அவளை ஒப்பிட்டுக் கொண்டு மேலும் ஒருவன்

உன்னை விரட்டி
விடியத் துடிக்கும் சூரியன்

வளர்ந்தாலும் தேய்ந்தாலும்
வருந்தாத ”நிலவே”

இன்று என் ஜன்னலில்
எட்டிப்பார்க்க வருவாயா?

எங்கள் 
முதல் முத்தத்துக்கு சாட்சியாய்!!!