Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Tuesday, 7 August 2012

கருணை!!




உனக்கும்
கரிசனம் இருக்கிறது என்பதை காட்ட
என்னை பற்றி நான்கு
வரிகள் மட்டுமே எழுத முடிந்த நீ
என்
பின்னால் நின்று
என்னை வேடிக்கை பார்
படம் எடு
கருணை சிந்து
முடிந்தால் ஒரு பத்து ரூபாய் தாளை நீட்டு
பரிதாபப்பட்டு
உன்னை மனுஷியாய் காட்டிக்கொள்ளாதே
உனக்கெப்படி
தெரியும் நீ போன பின்
உன்னை போல் நான் ஏன் இருக்க கூடாது என்ற
கனவும் என் முதுகில் சுமையாகுமென்று!!!

Saturday, 28 July 2012

பேராசை!!



ஆசைகளை களைய
அனைத்தும் வியப்பாய் இருந்தது
எந்த தேவனிடம் பிரார்த்திக்க
இனி என்னை எந்த பேராசையும் கவ்வக்கூடாதென்று
மனசை கொஞ்சம் கீறி
ரணமாக்கிக்கொண்டேன் வலிக்கிறது
காயத்துக்கு மருந்திடும் எண்ணமில்லை
சற்றே வலிக்கட்டும் இப்போதைக்கு
அதற்குள் ஆசைகளை துறக்கவும் பயின்றுக்கொள்கிறேன்
எனக்கானவை என்பதன் மென் பொருள்
மெல்ல புரிய களைகிறது என் கூரையின் மேல் வானம்
நிர்மூலமாய் வெகு நிர்மூலமாய்
ம்ம்ம்ம்
இனி இதில் சுகம் தேட பழகிக்கொள்ளவேண்டும் என
எண்ணி முடிக்கையில்
ஒரு நாள் தோழி சொன்னது நினைவில் வந்தது
உன்னில் தேடு அன்பை என்று..
எனக்குள் சிரித்துக்கொள்கிறேன் எனக்கும் கேட்கிறது என் சிரிப்பு இப்போது
ஒரு முறை வந்து போனது எனக்குள் சட்டமிடப்பட்ட உன் முகம்!!!

செந்நிற கணங்கள்


செந்நிற கணங்கள்
இருப்புக்கொள்ளாமல் நீ என் இருப்பில்
கொடுத்த அன்பையெல்லாம்
தவணை முறையில் ஈட்டிக்கொண்டு
இருக்கிறாய் தகிப்பு முறை கையாண்டு
இரவுகள் எடுக்கும் முடிவையெல்லாம்
கலைத்து போட்டு குளிர்க்காய்கிறது
அன்றாட விடியல்கள்
உன் கொடுங்கோலாட்சியில் ஏன் நான் மட்டும்
அடிமையாய்!!
நீ என் மன்னன் அல்லாத போதும்!!
இதோ நானும் தீயில் உருகி
என் மாமிசம் சதையாய் ஒழுகிக்கொண்டிருக்கிறது
குருதி மட்டும் தீயில் உறிஞ்சப்பட்டு
எலும்புகள் மட்டுமே மிஞ்ச
எடுத்து அணிந்துக்கொள்கிறாய் அதையும் மாலையாக்கி
எனக்கு இடுகாட்டானாயும்
நீ மட்டுமே இருக்க வேண்டுமென்ற
தீர்க்கத்தில்.....
பிடிமண் போடும் போது என் பேரை உச்சரிக்காதே
அடுத்த பிறவி எனக்கு உனக்காக வேண்டாம்!!!

Thursday, 26 July 2012

செளக்கியங்கள்!!!


செளக்கியம் கேட்பவர்களிடம்
எப்படி சொல்வேன்
மிகச்சொற்பமே கைவசம் என்று
இனி யாரேனும் கேட்பாராயின்
உயிரை கேட்பதாய் உத்தேசித்துள்ளேன்
அசெளக்கியங்களை அறிவதே
ஒரு செளக்கியத்தின் உத்தேசம்
இழப்புகளின் பலனாய் பாடம் இது
எப்படி பார்த்தாலும் அவர்களை விட
நான் பரவாயில்லை தான்
என்னிடம் செளக்கியம் கேட்டு
தங்கள் அசெளகரியத்தை எனக்கு
விட்டுச்செல்ல உத்தேசித்துள்ள
உத்தேசம் எனக்கும் வெகு சமீபத்தில் தான் உரைத்தது
சமீபமாய் உன் அசெளக்கத்தை என்னிடம் காட்டிய நீ தான்
அனேகமாய் இந்த கவிதைக்கும் கதாநாயகன்!!!

Tuesday, 24 July 2012

காலம்!!!

உன்னை
பார்க்கும் போதெல்லாம் ஏதோ ஒன்று சொல்ல
எதையோ கேட்டவே நினைக்கிறது மனம்
உன் கண்ணீர் கண்டதும் என்னை அணைத்தப்படி
நீங்கிவிடுகிறேன் நீயும் வழிந்த கண்ணீரை துடைக்க
மறந்த படி சென்றுக்கொண்டிருக்கிறாய்
இருப்பினும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது
நீ கண்ணீருடனும் நான் வெறுங்கையுடனும்
ஒரு நாள் சந்திப்போம் என்று
அன்று அலவளாவிக்கொள்வோம்
நான் தந்து சென்றது நீ கொண்டு சென்றது பற்றியெல்லாம்
அதுவரை நீ சிந்தியபடி இரு கண்ணீரை
நான் எப்படி கேட்பது என்று
கேட்டுக்கொண்டே இருக்கிறேன் என்னை
அதுவரை வேறு ஒலங்கள் கேட்காதிருக்கட்டும் நமக்கு!!!

Monday, 23 July 2012

அவள் அப்படித்தான்!!!

கொஞ்சம்
மெறுகேற முனைகிறேன்
வேறு வழியே இல்லை
உன்னை இறக்கி வைப்பதை தவிர
என் பேனாவின் முனை
மழுங்க செய்தததை விட
வேறொன்றும் தரவில்லை நீ பதிலுக்கு
ஒரு ஈரப்புன்னகைக்கும்
காயந்திருந்தது உன் இரக்கமற்ற இதழ்கள்
ஒரு
ரோஜாவை கூட ரசிக்கும் மன நிலை காணவில்லை உன்னிடம்
பேருந்தை தவற விடக்கூடாதென்பதிலேயே உன் கவனமெல்லாம்
உன்னை பேருந்து ஏற்றி விட்டு கை அசைத்து விடைபெறுகையில்
உள்ளங்கையில் ஈரக்கசிவு
அனேகமாய் அது உன் மேல் தெரித்திருக்க வாய்ப்பில்லை
தாலாட்டி உறங்கப்பண்ணித்தான் ஓய்வெடுக்கப்போகிறேன் உன்னில் இருந்து
நீ எழுந்தாலும் என்னை அழைக்காதே
உன் தேவைகள் அனைத்தும் உன் கை எட்டிய தூரத்தில்
அடுக்கி வைத்திருக்கிறேன் இனி உன்னை நீயே பராமரித்துக்கொள்
இது என்ன என்று கேட்பவர்களுக்கும் என்னிடம்
பதில் ஏதும் இல்லை கடந்து போய்க்கொண்டிருங்கள்
அவள் அப்படித்தான்!!!!

Wednesday, 18 July 2012

மனசு

எல்லாம் ஏதுவாய் இருக்கிறது
புன்னகைத்துக்கொண்டே இருக்க..
ஒரு அறிமுகம்
சாலைகடத்தல்
சேலை தேர்வு,
விட்டுக்கொடுத்தல்
சின்ன சின்ன சண்டை,
நெட்டி முறித்தல்
முத்தமிடுதல்,
காதல் சொல்வது
மெளனப்போராட்டம்
ஊடுறுவல்,
இதயம் துளைத்தல்
கண்ணாமூச்சி
சமையல்
அடுத்த வீட்டு ஜன்னல்
கொஞ்சம் பொறாமை
புதுசா தைத்த சுடிதார்
கவிதை எழுதுதல்
நண்பர்களோடு அரட்டை
புறம் பேசுவது
இப்படி
இன்னும் இன்னும்
எல்லாம் ஏதுவாய் இருக்கிறது
புன்னகைத்துக்கொண்டே இருக்க
இருப்பினும்
எதற்கோ புழுங்கிக்கொண்டிருக்கிறது
”மனசு”

Wednesday, 4 July 2012

வா இலக்கியமாகலாம்..

உன்னை
நிந்தித்தும்
என்னை நொந்துக்கொண்டும்
கால விரயமே...
இருப்பினும்
பசிக்க தவறவில்லை
வேஷம் இடுவதும் நின்றுவிடவில்லை
ஏதோ
ஒன்றுக்காக ஏதோ ஒன்றில்
செயல்பட்டாக வேண்டிய
கட்டாயத்தில்
நீ
நான்
அவர்கள்
இவர்கள்
அவை
இவை
கடந்து கொண்டிருக்கிறது
பொழுதுகள்
இப்போதெல்லாம்
எதற்கும் கலங்குவதில்லை விழிகள்
புத்தகமாக
எல்லா கட்டுகளும் பொருந்தியபடியால்
ஒரு
இலக்கியத்திற்கு நாயகியாய்
எல்லா தகுதிகளோடும்
நான்
ஏன்
நீ கூட என்னை
காவியமாக்கலாம்
உனக்கும் அதற்கு
எல்லா திறமைகளும் உண்டு
நேற்றைய
உண்மை இன்றைய சரித்தரம்
நீயும் நானும்
நாளைய இலக்கியமாய் மாறலாம்
உன்னால்
இயலாது என்றால் சொல்
வேறு
எவரையேனும்
நம்மை
எழுத சொல்லலாம்

Wednesday, 13 June 2012

இழிவு காலமா?

அன்றொருவன்
காதலிக்க
அடுத்தொருவனை
மணமுடித்தனர்
இன்று
நானொருவனை காதலிக்க
ஈரமில்லாத பூமி
சொல்கிறது
இதென்ன இழிவு காலமென...

நான் யாரென்று
எனக்கே புரியாமல் போக
என்
எழுத்துக்களை
ஆணாக்கி அன்றாடம்
என்னை நானே
மானபங்கப்படுத்திக்கொள்கிறேன்...

எந்த புலவன் இனி
வரப்போகிறான்
என்னை
காவியமாய் படைக்க?

Monday, 11 June 2012

கோலம்.

நேர்த்தியாய்
திருத்திய புள்ளி நீ
சாரலுக்கே அழிந்துவிட்டாய்
நியதி தான்
எதுவும் விதிவிலக்கல்ல
என் பேராசைக்கு முன்..

இனி
கோலமிடும் எண்ணமில்லை
என் வாசல்
அம்மணமாகவே இருக்கட்டும்
இனியொரு
வண்ண கோலம்
வேண்டாம்
வாழ்க்கைக்கும்...

தேடல்

என்
ஏமாற்றத்தை
இயலாமையை
தவிப்பை
ஏக்கத்தை
நிர்வாணமாக்கி
குத்தி கீறி இரணமாக்கி
காண்கையில்
கொக்கரிக்கிறது
சிதறிய ரத்ததுளிகளும் மாமிச துண்டுகளும்
இப்போதும்
உனக்கு ஒன்றும் கிடைத்திருக்காதே என்று..

-----------------------

பகுதி
வாரியாய் பிரிக்க
எத்தனிக்கையில்
நான் நீ என போட்டி போட்டுக்கொண்டு
பிரிவுகள்
எதை பிரித்து எதை எதால் வகுத்து
இயலுமா எல்லாம்
தளர்ந்து விட்டேன்
இருந்து போகட்டும்
இந்த இயலாமையை
இறுமாப்பாய் காட்டிக்கொண்டு
நடையை கட்டுகிறேன் நான்
எதையும் கண்டுக்கொள்ளாமல்
ஜனநாயகம்.

----------------

வேடிக்கை

அவள்
கண்களில் அந்த காயம்
ஆறாமல் சீழ் வடிய

அவன்
கண்களில் மேலும் ஒரு மொட்டு
அரும்ப துடிக்கும் தயார் நிலையில்

அவர்கள்
கண்களில் இன்னும் சற்று அதிக பிரகாசம்
நிமிர்ந்து உட்கார்ந்து உட்கார்ந்து
இடை வலித்த பின்னும்
சுவாரஸ்யத்தின் முனைப்பில்

இப்படியாக
காலங்கள் கடக்க
நேற்று அன்றாகி
இன்று நேற்றாகி
நாளைக்காக காத்திருக்கு
அரசியல்
ஆன்மீகம்
சமூகம்
காதல்
விலைவாசி
தோல்வி
வெற்றி
கல்வி
கடன்
ஜெனம்
மரணம்
பாவ புண்ணியம்
குழந்தை சிரிப்பு
நோயின் வலி
தீவிரம் அடக்கா பசியோடு
நா........

Sunday, 10 June 2012

கலியுகம்

மாசறு
பொன்னாய் வாழ்ந்ததெல்லாம்
பொற்காலம்
கற்றல் கேட்டல் அறிதல்
இப்படி
அனைந்தும் அறிந்ததன் பயனாய்
நிம்மதி தொலைந்து
மாசுறு பெண்ணானேன்..
இம்மை
மறுமைக்கெல்லாம் அஞ்சியது அக்காலம்
எப்பாடுபட்டு கெட்டதெல்லாம் எதற்காக
நான் நடக்கும் பொருட்டு
சிந்தும் ஆணவத்துளிகளால்
பிறர் ஆசிர்வதிக்கப்படுவார்களே அதற்காக!!!

Wednesday, 2 May 2012

தந்து சென்ற முத்தம்..

ஆறாமலே 
இன்னும் இளஞ்சூடாய்

மீட்டுக்கொண்டு போடா
உன் முத்தத்தை

நீ தந்து போன
சுவடறிந்து என்னிடம்
குரோதம் பாராட்டும்
அண்டை வீட்டு பெண்கள்
கொடி மல்லிகை
தொட்டியில் பூத்த ரோஜா 
பருவம் என்று பசப்பும் மழை
மிரட்டி பார்க்கும் இடி மின்னல்
கண் சிமிட்டி காதல் சொல்லும் விண் மீன் கூட்டம்
என நீளும் பட்டியலுக்கு
முற்றுப்புள்ளி வைத்து

மீட்டுக் கொண்டு போடா
உன் முத்தத்தை.........

Monday, 30 April 2012

மே 1



பெரும்பானமையெனும்
பேரிரைச்சலில்
வெள்ளப்பெருக்கின் வீரியமாய்
அடித்துச் செல்லும் 
சிறுபான்மையின் பெருகுரல்
ஒரு விடியலுக்கான காத்திருப்பில்
அன்றாடம் வேர்வையாய் சிந்தும்
உதிரத்துளிகள் கணக்கெடுப்பில் வருவதில்லை
நிர்ணயித்த கொடைக்கூலியால்

விலைவாசி அரக்கனின்
கொடூரப்பசியில் குரல்வலை சிக்கி
நசித்துக் கொண்டிருக்கும்
எங்களுக்கு கொண்டாட்டமாய்
பேரில் மட்டுமே புழங்குகிறது
இந்த மே பெரு தினம்

ஒரு விடியலுக்கு 
காத்திருப்பு
முடிவுக்கென சில
பிணக்காய் பல
ஆரம்பத்திற்கு
அகம் மகிழ
பொய்கள் 
புறவாழ்வு வெறுத்து
மரணம் வாங்கி
மனமகிழ்தல் 
வினாக்களோடு வீதி வலம் 
புறக்கணப்பு
தெளிதல்
இழத்தல்
உணர்தல்
ஊழியம்
போதும் இந்த பெருவாழ்வென

ஒய்வெடுக்கும் போது
விஸ்வரூபம் எடுக்கும்
முதுமை என்னும் இயலாமை
முடியும் வரை நிமிரவே நேரமின்றி
முடிந்து போகிறது எங்கள் பிறவி

இருந்தும் தன்னம்பிக்கை
தளர்வதில்லை எங்களுக்கு
வறுமை கோட்டை சற்று தளர்த்தி தான்
ஓய்கிறோம் எங்கள் சந்ததிகளுக்கு
கல்வியென்னும் களஞ்சியத்தை காட்டி...

Tuesday, 24 April 2012

மானிட பிரம்மன்



இதோ
பிரம்மன் தனக்காக
என்னை
சிருஷ்டிக்கிறான்
பார்வை
காதல்
கணிவு
பாசம்
ஆசை
காமம்
உரிமை
அக்கறை
கருணை
தாய்மை
கோபம் 
இறைமை 
பத்து பத்து விழுக்காடு இட்டு
நூறுக்கு மேற்பட்ட விழுக்காட்டோடு
அதீததமாய் அங்கரீக்கப்பட்டேன்
அந்த மானிட பிரம்மனுக்கு
பொருத்தமான தேவதையாய் நான்!!!.

Monday, 23 April 2012

நிலா நிலா ஓடிவா!!

கலையும் மேகக்குவியலில்
ஒளிந்தும் ஓடியும்
விளையாடி கொண்டிருக்கிறாய் நீ

நட்சத்திரங்களை எண்ணி
தோற்றுக் கொண்டு இருக்கிறது
கனவுகள் பொய்யான 
பல ஜோடி கண்கள்

உன்னை எழுதி
கொண்டாடிக் கொண்டிருக்கிறது
கவி உலகம்

உன் ஒளி தாங்கி
மடி விரித்து பூமி.
.
உன்னை பிடித்து தருவதாய்
இன்னும் பொய் சொல்லி
சோறுட்டும் ஓரிரு அம்மாக்கள்

அதோ உன் அழகுக்கு
அவளை ஒப்பிட்டுக் கொண்டு மேலும் ஒருவன்

உன்னை விரட்டி
விடியத் துடிக்கும் சூரியன்

வளர்ந்தாலும் தேய்ந்தாலும்
வருந்தாத ”நிலவே”

இன்று என் ஜன்னலில்
எட்டிப்பார்க்க வருவாயா?

எங்கள் 
முதல் முத்தத்துக்கு சாட்சியாய்!!!